Sunday, December 27, 2015

ஒரு சிப்பாயின் சுவடுகளில்..!

வணக்கம் நண்பர்களே!
              
                 *இந்த கிராபிக் நாவலின் முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி பக்கம் வரை சொல்லப்பட்ட கதையை மட்டுமே சுருக்கமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். 
தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்ள தயாராகவே இருக்கிறேன்.!
---------//வாங்க நாமும் அந்த சிப்பாயின் சுவடுகளை பின்பற்றிப் போய் பார்ப்போம்.!-------- 

              *முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்., வியட்நாமில் புரட்சியை அடக்க புறப்பட்டு போன ப்ரெஞ்ச் படையில் பலியானவர்களின் சவப்பெட்டிகளை  சுமந்து கொண்டு ப்ரான்ஸ் வருகிறது ஒரு விமானம். 
சாதிக்க போன சிப்பாய்களில் சிலர்  சவப்பெட்டிகளாய் திரும்ப., அவற்றை பெற வந்திருக்கும் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறது ஒரு தொலைகாட்சி நிறுவனம். ஒட்டுமொத்த ப்ரான்சும் நிகழ்சியை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
              *விவரிக்க இயலாத சோகத்தை முகத்தில் தேக்கி நிற்கும் ஒரு மூதாட்டியை பேட்டி எடுக்கிறார்கள். வியட்நாமுக்கு போன தன் மகனைப்பற்றி தகவலேதும் கிடைக்கவில்லை என்கிறாள் அம்மூதாட்டி. போர் முடிந்து திரும்பவும் இல்லை. இறந்தவர்களின் பட்டியலிலும் அவன் பெயர் இல்லை. ஏதாவது தகவல் கிடைக்காதா என்று ஏக்கத்தோடு இருக்கிறாள் மூதாட்டி. 
"மிஸஸ் ஜோபர்ட் டி வலென்ட்ரே " என்று தன்னுடைய பெயரை மூதாட்டி சொன்னதும்  , ஒரு மனநோய் காப்பகத்தில் இந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நியூரித் என்னும் நபர் வெறீபிடித்தவர் போலாகி டிவியை உடைத்துவிடுகிறார் (1)
              *அன்றிரவே காப்பத்திலிருந்து தப்பிச்செல்கிறார் நியூரித். இத்தகவலை டாக்டர் ரகசியமாக தொலைபேசியில் ஒருவருக்கு தெரிவிக்கிறார் (2) .
              *இதே நிகழ்ச்சியை ஒரு பாரில் இருந்து பார்க்கும் டீவி ரிப்போர்ட்டரான நிக்கோலஸ் வலோனுக்கு, காணாமல் போன மூதாட்டியின் மகனான அந்த  சிப்பாயை பற்றி ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் யோசனை வருகிறது. மேலிடத்தில் போராடி அனுமதி பெறும் வலோன் அம்மூதாட்டியை காணச் செல்லும் வழியில் விபத்தொன்றில் ஒருவர் பலியானதை பார்க்கிறார்.  இறந்தவர் யாரென்று நிக்கோலஸுக்கு தெரியாது. நமக்கு தெரியும். அது மனநோயாளி நியூரித். இந்த இடத்தில் ஒரு நீலக்கலர் காரும் மர்ம நபர் ஒருவரும் காண்பிக்கப் படுகிறார்கள் (3)
              *கேப்ரியேல் லாரு  (3.1 ) என்றொரு பத்திரிக்கையாளர் மூதாட்டியின் வீட்டிற்கு செல்லும் வழியை வலோனுக்கு சொல்கிறார். ஹென்றியின் தாயான மூதாட்டியிடமிருந்து அவனுடைய நிழல் படம் ஒன்றையும் சில நண்பர்கள் மற்றும் காதலி பற்றிய தகவலோடு திரும்பும் வலோனை நீலக்கார் ஆசாமி பின்தொடர்ந்து கவனித்துக்கொண்டே வருகிறான்.
         
             *ஹென்றியின் காதலி மற்றும் நண்பரிடம் விசாரித்து , அவன் ப்ரெஞ்சு புரட்சி படையில் அங்கம் வகித்து பின்னர் ராணுவத்தில் சேர்ந்ததையும் , வியட்நாமிய கொரில்லா படையில் இணைந்ததையும்  அறிந்து கொள்கிறார் வலோன். ஹென்றி பற்றிய ஆராய்ச்சியை தொடர வேண்டாமென வலோனுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. ஹென்றியே பேசுவது போல ஒரு போன்காலும் வருகிறது. ஆனால் அசராமால் தேடலை தொடர்கிறார் வலோன். 

             
             *அடுத்தடுத்த தகவல்களால் ஹென்றி குறித்த மர்மங்களே அதிகமாகிறதே தவிர அவனுக்கு என்ன ஆயிற்று?  உண்மையில் அவன் யார் என்பதும் மர்மமாகவே தொடர்கிறது. தொடரும் தேடலில் குய்ச்சார்ட் என்ற நபருக்கு ஹென்றியைப் பற்றி நிறைய தவல்கள் தெரியும் என்று வலோனுக்கு தெரியவருகிறது. குய்ச்சார்ட்டின் வீட்டை  வலோன் அடைந்தபோது.  அவர் இறந்து கிடக்கிறார். (சற்று தூரத்தில் நீலக்கார் ஆசாமி தென்படுகிறார்.)
             *குய்ச்சார்ட்டின் வீட்டில் தேடியதில் வலோனின் கையில் சிக்குகிறது ஒரு கடிதம். அந்த கடிதம் வியட்நாமில் வசிக்கும் ஒரு பெண் குய்ச்சார்ட்டுக்கு எழுதியது. அந்தப் பெண் ஹென்றி ஜோபர்ட்டின் மகள்.
ஹென்றிக்கு குடும்பம் இருந்தது தெளிவாகவே., வியட்நாமுக்கு பயணிக்கிறார் வலோன்.  நீலக்கார் ஆசாமியும் பின் தொடர்கிறான்.
             *ஹென்றியின் மகளான கிம்சி தன்னுடைய தந்தை., ப்ரெஞ்ச் படையிலிருந்து எப்படி வியட்நாமீய கொரில்லா புரட்சி படையில் சேர்ந்தார் என்பதையும்.,  அவர் செய்த சில சாகசங்களையும் சொல்கிறாள். அவற்றுள் முக்கிய இடம் பெறும் சாகசமானது.,  ப்ரெஞ்ச் ஆயுதக்கிடங்கை ஹென்றி தலைமையிலான வியட்நாம் புரட்சியாளர்கள் சூறையாடுவதுதான். அந்த ஆயுதக்கிடங்கின் பொறுப்பதிகாரி காப்டன் கார்பினை (4) மடக்கி ஆயுதங்களை கிளப்பிக்கொண்டு போகிறது ஹென்றியின் செஞ்சட்டை படை.
              *சில நாட்கள் கழித்து துவாங் பை என்னும் இடத்தில் நிறைய போராளிகள் கைது செய்யப் படுகின்றனர். அந்த கைதிகளில்  தந்தை ஹென்றியும்  இருந்தாரா என்பது குறித்து கிம்சியின் தாய்க்கும் தெரியாது என்றும் அதன் பிறகு அவரைப் பற்றி தகவல் ஏதும் இல்லை என்கிறாள் கிம்சி. கிம்சிக்கும் தந்தை ஹென்றி எங்கே போனார்., என்ன ஆனார் என்பது பற்றி தெளிவாக தெரிவதில்லை. எனவே கிம்சியுடன் ப்ரான்ஸ் திரும்பும் வலோன், கிம்சியை அவளுடைய பாட்டியிடம் சேர்த்து விட்டு கேப்டன் கார்பினை சந்திக்க செல்கிறார்.
              

              *துவாங் பையில் போராளிகளை கைது செய்தவர் கேப்டன் கார்பின்தான். துவாங் பை என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட ஹென்றியை வேறோரு முகாமுக்கு அனுப்பிவிட்ட பிறகு அவனைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகிறார் அன்றைய கேப்டனும் இன்றைய ஜெனரலுமான கார்பின்.
              *ஹென்றியின் நிலை குறித்த மர்மம் வெளிவரும் வாய்ப்பே இல்லையென்று வலோன் சோர்ந்து போகும் சமயத்தில் கேப்ரியேல் லாரு மூலமாக புஜால் என்றொரு நபரை சந்திக்கும்படி தகவல் வருகிறது.
ஆரம்பத்தில் இருந்தே வலோனின் தொலைபேசியை ஒட்டுக்கேட்குமே நீலக்கார் ஆசாமி இதனையும் கேட்டுவிட்டு வலோனுக்கு முன்னதாக சென்று புஜாலை தீர்த்துக்கட்ட முயல்கிறான். கொலைமுயற்சியில் தப்பி மருத்துவமனையில் இருக்கும் புஜாலை சந்திக்கிறார் வலோன்.
              *ஹென்றி ஜோபர்ட் என்ற சிப்பாயின் சுவடுகள் முடிந்த தகவல்  புஜாலால், வலோனுக்கு  தெரிவிக்கப்படுகிறது. கேப்டன் கார்பினால்  கைது செய்யப்பட்ட ஹென்றி மற்றும் சில போராளிகள் டின்பின் முகாமில் நியூரித் மற்றும் புஜால் கைகளால் கொன்று புதைக்கப்படுகிறார்கள்.
              *பிடிபட்ட அணிமாறிய ப்ரெஞ்ச் சிப்பாய்களை கொல்லக்கூடாது என்று மேலிடம் சொல்லியிருந்தாலும் கேப்டன் கார்பினின்  உத்தரவுக்கு கீழ்படிந்து ஹென்றியை கொன்று புதைத்துவிடுகிறார்கள் நியூரித்தும் புஜாலும்.
               *வியட்நாம் போராளிகள் டின்பின் முகாம் செல்லும் வழியில் வண்டியை தாக்கி ஹென்றி உள்ளிட்ட போராளிகளை மீட்டுச் சென்றுவிட்டனர் என்று மேலிடத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து விடுகிறார் கார்பின்!
              *தற்போது உயர்பதவியில் இருக்கும் ஜெனரல் ரோஜர் கார்பினுக்கு., ஹென்றி ஜோபர்ட்டின் முடிவு குறித்து வெளியே தெரிவதால் பல சிக்கல்கள் எழும் என்பதாலேயே வலோனின் ஆய்வை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன  என்பது வலோனுக்கு புரியத் தொடங்குகிது.
ஒரூ வழியாக ஹென்றி ஜோபர்ட்டின் வாழ்க்கை ( ஒரு சிப்பாயின் சுவடுகளில்)  ஆவணப்படமாக நிக்கோலஸ் வலோன் என்னும் விடாக்கண்ட ரிப்போர்ட்டரால் பூர்த்தியடைகிறது.
              (1)  - ஹென்றி ஜோபர்ட்டை சுட்டுக்கொன்ற (கேப்டன் கார்பின் உத்தரவால்)  இருவரில் ஒருவரே இந்த நியூரித். (இன்னொருவர் புஜால்.) 
அந்த குற்ற உணர்வே நியூரித்தை மனநோயாளி ஆக்கிவிடுகிறது.
டீவியில் பேட்டியளிக்கும் மூதாட்டி ஹென்றி ஜோபர்ட்டின் தாயார் என்று தெரிந்ததும் நியூரித் அப்படி நடந்து கொள்கிறார்.
              (2)  நியூரித் தப்பிச்சென்ற தகவலை டாக்டர் போனில் தெரிவிப்பது  இந்நாளைய ஜெனரல் கார்பினுக்குத்தான். அவ்வபோது நியூரித்தின் நிலைகுறித்து டாக்டர் கார்பினுக்கு தகவல் தந்து கொண்டிருப்பார்.
              (3)  தப்பிச்சென்ற நியூரித் ஹென்றி குறித்த தகவலை வெளியே சொல்லிவிடக்கூடும் என்றெண்ணி , நியூரித்தை கொல்ல கார்பின் அனுப்பும் ஆசாமிதான் நீலக்கார் மர்மநபர். தொடர்ந்து வலோனுடைய நடவடிக்கைகளை கண்காணித்து., அவருடைய முயற்சிகளுக்கு தடைகளை ஏற்படுத்துவதும் இதே நீலக்கார் ஆசாமிதான். (ஜெனரல் கார்பின் உத்தரவுப்படி.)
              (3.1) - ஹென்றியின் தாயாரைப் பார்த்து உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கவே நியூரித் தப்பிச் சென்றிருக்கிறார் என்று யூகித்த கார்பின்., மூதாட்டியின் கிராமத்துக்கு செல்லும் வழியிலேயே அவரை கொன்றுவிடுகிறார் (நீலக்கார் ஆசாமி உதவியுடன்.)  அந்த இடத்தில் வலோனை சந்தித்து மூதாட்டியின் வீட்டிற்கு வழி சொல்லும் கேப்ரியேல் லாரு என்னும் பத்திரிகை நிருபர்தான் பின்னர் புஜாலை பற்றி வலோனுக்கு தகவல் தருகிறவர்.
              (4) - வியட்நாமிய புரட்சிப்படையில் செஞ்சட்டை தளபதி என்று பெயர் எடுத்திருந்த ஹென்றி ஜோபர்ட்., ப்ரெஞ்ச் முகாம் ஒன்றை தாக்கி ஆயுதங்ளை கைப்பற்றுகிறான். அந்த முகாமின் பொறுப்பதிகாரியாக இருந்தவர் கேப்டன் கார்பின். அந்த சம்பவம் அவருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியதாலேயே ஹென்றியின் மீது அதீத வன்மத்துடன் இருக்கிறார் கார்பின். பின்னர் துவாங் பையில் ஹென்றி கைது செய்யப்பட்டபோது., வெளியுலகுக்கு தெரியாமல் ஹென்றியை கொன்று புதைத்துவிடுகிறார் (நியூரித் மற்றும் புஜால் மூலமாக). இத்தனை தகவல்களையும் மிகுந்த சிரமப்பட்டு வலோன் ஆவணப்படுத்தி இருந்தாலும்., அதனை ஒளிபரப்ப டீவி நிலையத்திற்கு மேலிடம் தடைபோட்டுவிடுகிது. வலோன் தன்னுடைய அத்தனை உழைப்பும் வீணாக போனதால் விரக்தியில் "இதை இப்படியே விட்டுவிடமாட்டேன் " என்று ஆவேசமாக சொல்லிவிட்டு டீவி நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்.

              *(நிக்கோலஸ் வலோனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாலும்., ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடைபோட்ட பிறகும் வலோன் வேறு வழிமுறைகளில் ஹென்றியின் வரலாற்றை வெளியிட்டுவிடுவாரோ என்ற அச்சத்திலும் வலோனையும் தீர்த்துக்கட்டி இந்த முப்பாதாண்டுகால மர்மத்தை மர்மமாகவே நிலைத்துவிடச்செய்யும் எண்ணத்தில் நீலக்கார் மர்ம ஆசாமியை கார்பின் ஏவி விட்டிருக்கலாம் என்ற யூகம் என்னுடையது. கதையில் இல்லை)
              *வீட்டில் தனியாக பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது காலிங்பெல் சத்தமிடுகிறது. கதவை திறக்கிறார் வலோன்.  பின்னனியில் நீலக்கார் தெரிய மர்ம ஆசாமி புன்னகையுடன் வாசலில் நிற்க., கிழித்து போடப்பட்ட ஹென்றி ஜோபர்ட்டின் புகைப்பத்துடன் கதை நிறைவடைகிறது.!!!
              *கிராபிக் நாவல் என்றால் நிலவேம்பு கஷாயத்தை குடிக்கும் முகபாவத்தை கொண்டிருக்கும் நண்பர்களுக்காக இயண்றவரை விரிவாகவும் சுருக்கமாகவும் இவ்விமர்சனத்தை எழுதியுள்ளேன்.
அழகான ஆழமான சித்திரக் கதையான "ஒரு சிப்பாயின் சுவடுகளில் "  இந்த விமர்சனத்திற்கு பிறகு ஓரிரூ நண்பர்களால் சிலாகிக்கப்பட்டாலாவாது டைப்படித்த என்னுடைய விரல்களுக்கு ஒத்தடமாயிருக்கும்.! !! 
பொறுமையாக படித்தமைக்கு நன்றி நண்பர்களே!!!
என்றென்றும் நட்புடன் -
KiD ஆர்டின் KannaN.
---------------------------------------------------------------
சென்ற பதிவுக்குப்பின் சிலபல காரணங்களால் பதிவிட காலதாமதம் ஆனதற்கு சன்னமான சாரியை நண்பர்கள் அனைவரிடமும் இருவரும் கேட்டுக்கொள்கிறோம்.......உங்கள்...
சேலம்Tex விஜயராகவன்&KiD ஆர்டின் KannaN.